வினாயகர்
பிள்ளையார், கணபதி முதலான பல பெயர்களில் அழைக்கப்படும் தெய்வம் யானை முகம் கொண்ட நம் வினாயகர். அவரை சிவன் பார்வதி தம்பதிகளின் மூத்த மகன் என்றும், ஞானத்திற்க்கான கடவுள் என்றும் நம் சைவ மதத்தில் சொல்வது மரபு. யாராக இருந்தாலும் ஏன் சிவனாகவே இருந்தாலும் முதலில் பிள்ளையாரை கும்பிடாமல் அவருக்கு மரியாதை செய்யாமல் எந்த செயலையும் செய்ய கூடாது என்பது சைவ மதத்தில் பின்பற்றப்படும் வழக்கம். உன்மையில் யானை உருவத்தில் நம் மூதாதேயர்கள் உருவகப்படுத்தியது எதை தெரியுமா? ஞானத்தை. ஆம் பிள்ளையார் என்பவர் ஞானத்திற்க்கான கடவுள் என்றால் ஞானம்தான் பிள்ளையார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஞானம் அடைந்தவர்கள் தன் முழுபலத்தையும் தன்னுள்ளே அடக்கி அமைதியாக இருப்பார்கள் என்பதை குறிக்கவே யானையை ஞானத்திற்க்கான கடவுளாக உருவகப்படுத்தி உள்ளனர். சின்னஞ்சிறு மூஞ்சுருவை அவருக்கு வாகனமாக வைத்திருப்பது ஒரு முரண்பாடகவே தோன்றும். ஞானம் அடைந்த ஒருவரால் எந்த சூழ்நிலையிலும் எதை வேண்டுமானாலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை காட்டவே அத்தகைய ஒரு உருவகத்தை செய்துள்ளனர் நம் பெரியோர். ...